முதன்முறை எப்போது..
ஒரு வழியாய் நீ உன் காதலை கடற்கரையில் என்னிடம் சொல்லிய தினத்தன்றா? இல்லை அன்று நம் கண்கள் மட்டுமே முத்தமிட்டன. அவையெல்லாம் கணக்கில் வராது.
அதற்கடுத்த தினமே நாம் கடற்கரை சென்றோம். என் வலக்கையின் ஐந்து விரல்களை பத்தாய் மாற்றிக் கொன்டிருந்தது உன் இடக்கை.பாறையாய் என்னையும் அலையாய் உன்னையும் உருவகப் படுத்தினேன். அலை என்றால் சென்று விடும். என்றும் உன்னை வருடும் தென்றலாய்தான் நானிருப்பேன் என்றாய். உன் புறங்கையில் மென்மையாய் முத்தமிட்டேன். முழுவதும் முடிக்குமுன் வெடுக்கென பிடிங்கினாய். "வேறு இடமா கிடைக்கல" என்ற உன் வார்த்தையை, கடற்கரையைத்தான் சொல்கிறாய் எனத் தவறாக புரிந்துக் கொண்டது என் சிற்றறிவு.
மறுநாள் மீண்டும் கடற்கரை வந்தோம். நேற்று நடந்ததற்கு விளக்கம் கொடுத்தாய். அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்தேன். ஏனோ அன்று மீண்டும் முயற்சி செய்யவே இல்லை. மூன்றாம் நாளே நாம் நம் முதல் குழந்தைக்கு பெயர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தோம். முத்ததிற்கே வழியில்லை, இதில் குழந்தையாம் என மனதிற்குள் நீ சிரித்திருக்கலாம். எனக்கு கேட்கவில்லை.
மறுநாள் இல்லை, ஆனால் மீண்டும் ஒரு நாள் கடற்கரை வந்தோம். அன்று எப்படியாவது முத்தமிட வேண்டும் என முடிவு செய்தது நானில்லை. ஆனால் உன் முடிவை நீ என்னிடம் சொல்லவில்லை. தூரத்தில் வானமும் கடலும் முத்தமிட்டு கொண்டிருப்பதாக சொன்னாய். காதல் மொழி புரியவில்லை எனக்கு. பார்ப்பதற்கு அப்படி தெரிந்தாலும் அந்த சங்கமம் எங்கேயும் நடப்பதில்லை என்றேன் நான். ஒரு பார்வை பார்த்தாய்.
மறுநாள் கடற்கரை அழைத்தேன்.செல்லமாய் கோபப்பட்டாய். இந்த முறை முத்தம் உண்டு என்று உத்தரவாதத்துடன்தான் வர சம்மதித்தாய். ஆண் வர்க்கத்திற்கே தீராத களங்கம் ஏற்படுத்திய கவலை சிறிதும் இல்லாமல் உன்னுடன் நடந்தேன். எப்படி, எங்கே, எப்போது என வீட்டுப்பாடம் எதுவும் செய்யாததால் முழித்துக் கொண்டிருந்தேன். என் காதலி அல்லவா நீ.. என்னைப் போலவே நீயும் பெண் வர்க்கத்திற்கு களங்கம் செய்ய நினைத்தாயோ என்னவோ திடிரென என கன்னத்தில் இச்சென்றாய். முத்தமிட்ட உன்னைப் பார்க்காமால் சுற்றுமுற்றும் பார்த்தேன் நான். என்ன நினைத்தாயோ தெரியவில்லை.
உன்னை பழிதீர்க்க வேண்டாமா? நீ கொடுத்ததை திருப்பித் தர வேண்டாமா என வீராவேச வசனங்கள் பேசி மீண்டும் கடற்கரைக்கு அழைத்தேன். துள்ளி குதித்து வந்தாய். பேச்சின் நடுவே உன்னைப் போல் நீ எதிர்பாராத தருனத்தில் என் கணக்கைத் தீர்த்தேன். நானும் முத்தமிட்டதை போல் உணரவில்லை. நீயும். இப்படி கொடுப்பதெல்லாம் முத்தமல்ல என்றேன் நான். செல்லமாய் அடித்தாய். " நானா வேணான்னு சொல்றேன்" என சினுங்கினாய்.
நல்லதொரு சந்தர்ப்பத்திற்காக இருவரும் காத்திருந்தோம். தொலைபேசியில் முத்தமிடுவாய். உன் முத்தங்களையெல்லாம் அது எடுத்துக் கொண்டு எனக்கு வெறும் சத்தததையே தரும். கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது தெரியுமா என்பேன் நான். உன்னைப் போல் ஒருவனை காதலித்த பெண்ணின் கண்ணீரால்தான் என வம்படிப்பாய். திரையரங்கில் முத்தம் கேட்டாய். சம்மதமில்லை என்றேன் நான். குழி விழும் உன் மெல்லிய கன்னங்களை என் கைகளில் ஏந்தி, காந்தத்தால் செய்யப்பட்ட உன் கண்களை உற்று நோக்கி, தேன் சுமக்கும் உன் இதழ்களை என் இதழ்களால் வருடி முத்தமிட வேண்டும். அந்த முதல் முத்தம் குறைந்த பட்சம் ஐந்து நிமிடம் நீடிக்க வேண்டும் என்றேன் நான். ஆச்சரியமாய் பார்த்தாய். என்னை விட்டு என் முத்தத்தை காதலிக்க போவதாய் சொன்னாய்.
அதன் பின் நடந்ததெல்லாம் சொல்லும்படி இல்லை. நம் காதல் நம்மைத் தவிர அந்தக் கடலுக்கு மட்டுமே தெரியும் என்றாய். கடல் கூட கண் வைக்குமா என்ன? எல்லாம் சிதறியது. நம் போராட்டம், உன் தந்தையின் மிரட்டல், என் கடமைகள், என எல்லாம் நமக்கெதிராய் சதி செய்தன. பின் ஒரு மழைக்கால மாலையில் வெகுநாட்களுக்கு பிறகு நம் கடற்கரையில் சந்தித்தோம். கடைசி சந்திப்பு என்ற உன் நிபந்தனை பேரில்தான். என்ன வேண்டும் என்றாய். உன் புகைப்படம் என்றேன் நான். முத்தம்? என்றாய். ஏனோ மறுத்து விட்டேன். “ உன் கன்னத்தில் மட்டும் ஏன் குழி என நினைத்திருக்கிறேன். அன்று, ஒரு கண்ணீர்த் துளி கண்களில் பிறந்து உன் கன்னத்தை தடவி, குழியில் இறங்கி உன் உதட்டில் உயிரை விட்டது. கடவுளே!! அந்தக் கண்ணீர்த் துளியாகவாது நான் பிறந்திருக்க கூடாதா? ’’.. ஏதேதோ பேசி விட்டு புகைப்படமும் தராமால் சென்று விட்டாய்.
இதுவரை நிகழவில்லை நான் கனவு கண்ட அந்த முத்தம். இனி மேல் நிகழ்ந்தாலும் அது முத்தமாக கணக்கிட முடியாது. உனக்காக காத்திருக்கிறேன். ஒரு முடிவுக்காக காத்திருக்கலாம்.. ஆனால் என் கதையில் காத்திருப்பதே முடிவாகிவிட்டது.
