Feb 9, 2010

முத்தம் முத்தம் முத்தமா..

 

முதன்முறை எப்போது..

   ஒரு வழியாய் நீ உன் காதலை கடற்கரையில் என்னிடம் சொல்லிய தினத்தன்றா? இல்லை அன்று நம் கண்கள் மட்டுமே முத்தமிட்டன. அவையெல்லாம் கணக்கில் வராது.

    அதற்கடுத்த தினமே நாம் கடற்கரை சென்றோம். என் வலக்கையின் ஐந்து விரல்களை பத்தாய் மாற்றிக் கொன்டிருந்தது உன் இடக்கை.பாறையாய் என்னையும் அலையாய் உன்னையும் உருவகப் படுத்தினேன். அலை என்றால் சென்று விடும். என்றும் உன்னை வருடும் தென்றலாய்தான் நானிருப்பேன் என்றாய். உன் புறங்கையில் மென்மையாய் முத்தமிட்டேன். முழுவதும் முடிக்குமுன் வெடுக்கென பிடிங்கினாய். "வேறு இடமா கிடைக்கல" என்ற உன் வார்த்தையை, கடற்கரையைத்தான் சொல்கிறாய் எனத் தவறாக புரிந்துக் கொண்டது என் சிற்றறிவு.

      மறுநாள் மீண்டும் கடற்கரை வந்தோம். நேற்று நடந்ததற்கு விளக்கம் கொடுத்தாய். அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்தேன். ஏனோ அன்று மீண்டும் முயற்சி செய்யவே இல்லை. மூன்றாம் நாளே நாம் நம் முதல் குழந்தைக்கு பெயர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தோம். முத்ததிற்கே வழியில்லை, இதில் குழந்தையாம் என மனதிற்குள் நீ சிரித்திருக்கலாம். எனக்கு கேட்கவில்லை.

     மறுநாள் இல்லை, ஆனால் மீண்டும் ஒரு நாள் கடற்கரை வந்தோம். அன்று எப்படியாவது முத்தமிட வேண்டும் என முடிவு செய்தது நானில்லை. ஆனால் உன் முடிவை நீ என்னிடம்  சொல்லவில்லை. தூரத்தில் வானமும் கடலும் முத்தமிட்டு கொண்டிருப்பதாக சொன்னாய். காதல் மொழி புரியவில்லை எனக்கு. பார்ப்பதற்கு அப்படி தெரிந்தாலும் அந்த சங்கமம் எங்கேயும் நடப்பதில்லை என்றேன் நான். ஒரு பார்வை பார்த்தாய்.

     மறுநாள் கடற்கரை அழைத்தேன்.செல்லமாய் கோபப்பட்டாய். இந்த முறை முத்தம் உண்டு என்று உத்தரவாதத்துடன்தான் வர சம்மதித்தாய். ஆண் வர்க்கத்திற்கே தீராத களங்கம் ஏற்படுத்திய கவலை சிறிதும் இல்லாமல் உன்னுடன் நடந்தேன். எப்படி, எங்கே, எப்போது என வீட்டுப்பாடம் எதுவும் செய்யாததால் முழித்துக் கொண்டிருந்தேன். என் காதலி அல்லவா நீ.. என்னைப் போலவே நீயும் பெண் வர்க்கத்திற்கு களங்கம் செய்ய நினைத்தாயோ என்னவோ திடிரென என கன்னத்தில் இச்சென்றாய். முத்தமிட்ட உன்னைப் பார்க்காமால் சுற்றுமுற்றும் பார்த்தேன் நான். என்ன நினைத்தாயோ தெரியவில்லை.

     உன்னை பழிதீர்க்க வேண்டாமா? நீ கொடுத்ததை திருப்பித் தர வேண்டாமா என வீராவேச வசனங்கள் பேசி மீண்டும் கடற்கரைக்கு அழைத்தேன். துள்ளி குதித்து வந்தாய். பேச்சின் நடுவே உன்னைப் போல் நீ எதிர்பாராத தருனத்தில் என் கணக்கைத் தீர்த்தேன். நானும் முத்தமிட்டதை போல் உணரவில்லை. நீயும். இப்படி கொடுப்பதெல்லாம் முத்தமல்ல என்றேன் நான். செல்லமாய் அடித்தாய். " நானா வேணான்னு சொல்றேன்" என சினுங்கினாய்.

      நல்லதொரு சந்தர்ப்பத்திற்காக இருவரும் காத்திருந்தோம். தொலைபேசியில் முத்தமிடுவாய். உன் முத்தங்களையெல்லாம் அது எடுத்துக் கொண்டு எனக்கு வெறும் சத்தததையே தரும். கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது தெரியுமா என்பேன் நான். உன்னைப் போல் ஒருவனை காதலித்த பெண்ணின் கண்ணீரால்தான் என வம்படிப்பாய். திரையரங்கில் முத்தம் கேட்டாய். சம்மதமில்லை என்றேன் நான். குழி விழும் உன் மெல்லிய கன்னங்களை என் கைகளில் ஏந்தி, காந்தத்தால் செய்யப்பட்ட உன் கண்களை உற்று நோக்கி, தேன் சுமக்கும் உன் இதழ்களை என் இதழ்களால் வருடி முத்தமிட வேண்டும். அந்த முதல் முத்தம் குறைந்த பட்சம் ஐந்து நிமிடம் நீடிக்க வேண்டும் என்றேன் நான். ஆச்சரியமாய் பார்த்தாய். என்னை விட்டு என் முத்தத்தை காதலிக்க போவதாய் சொன்னாய்.

     அதன் பின் நடந்ததெல்லாம் சொல்லும்படி இல்லை. நம் காதல் நம்மைத் தவிர அந்தக் கடலுக்கு மட்டுமே தெரியும் என்றாய். கடல் கூட கண் வைக்குமா என்ன? எல்லாம் சிதறியது. நம் போராட்டம், உன் தந்தையின் மிரட்டல், என் கடமைகள், என எல்லாம் நமக்கெதிராய் சதி செய்தன. பின் ஒரு மழைக்கால மாலையில் வெகுநாட்களுக்கு பிறகு நம் கடற்கரையில் சந்தித்தோம். கடைசி சந்திப்பு என்ற உன் நிபந்தனை பேரில்தான். என்ன வேண்டும் என்றாய். உன் புகைப்படம் என்றேன் நான். முத்தம்? என்றாய். ஏனோ மறுத்து விட்டேன்.  “ உன் கன்னத்தில் மட்டும் ஏன் குழி என நினைத்திருக்கிறேன். அன்று, ஒரு கண்ணீர்த் துளி கண்களில் பிறந்து உன் கன்னத்தை தடவி, குழியில் இறங்கி உன் உதட்டில் உயிரை விட்டது. கடவுளே!! அந்தக் கண்ணீர்த் துளியாகவாது நான் பிறந்திருக்க கூடாதா? ’’.. ஏதேதோ பேசி விட்டு புகைப்படமும் தராமால் சென்று விட்டாய்.

     இதுவரை நிகழவில்லை நான் கனவு கண்ட அந்த முத்தம். இனி மேல் நிகழ்ந்தாலும் அது முத்தமாக கணக்கிட முடியாது. உனக்காக காத்திருக்கிறேன். ஒரு முடிவுக்காக காத்திருக்கலாம்.. ஆனால் என் கதையில் காத்திருப்பதே முடிவாகிவிட்டது.

Feb 8, 2010

பிள்ளையார் எனும் களவாணிப்பையன்

 

உனக்கொரு குட்டி தங்கை

உண்டா என்றபோது முறைத்தாய்

ஹைக்கூவைப் பற்றி

நான்

தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

பொண்ணு பின்னாடி சுத்தறான்

என்று யாரோ அம்மாவிடம்

சொல்லி இருக்கிறார்கள்.

இல்லை சரியா பாருங்க

அவன் தேவதை பின்னால்தானே போறான்

என்றார்களாம் உன் அத்தை

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

எதற்கு தோதாக

கருப்பு நிற பொட்டு

என கேட்க நினைத்து

உனக்குத்தாண்டா என்று

நீ சொல்லிவிடக்கூடுமென்பதால்

விட்டுவிட்டேன்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீ

கன்னத்தில் கை வைத்திருக்கும்

அழகைப் பார்க்க

எத்தனை

கப்பலை வேண்டுமென்றாலும்

கவிழ்க்கலாமடி..

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

பிள்ளையாரிடம் வேண்டும்போது

கண்களை மூடிக் கொள்ளாதே..

களவாணிப்பையன்..

உன் முன்பு வந்து

தோப்புக்கரணம் போட்டு

என்னத்த வேண்டிக்கிட்டானோ?

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

கோவிலுக்கு வருபவர்களெல்லாம்

உண்டியலில் சில்லறை போடுகிறார்கள்.

நீ போய்

சிரித்து விட்டு வந்துவிடு

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

பையன் எவ்ளோம்மா சம்பாதிக்கிறார்

என்ற தரகரிடம்

”கைநிறைய” என்றார் அம்மா.

இனி முத்தத்தை கைகளில்

தந்துவிடு

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

Feb 7, 2010

காதல் – கடவுளின் மொழி

 

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காதலர்கள் தினம்.

   கடவுள் பல வழிகளில் நம்முடன் உரையாடிகிறார். குழந்தையும்,காதலும் அவரின் இரு முக்கியமான வழிகள் என்கிறார் ஒரு கஜல் காதலன். கஜல் என்றால் காதலியுடன் பேசுவது என்று அர்த்தமாம்.பெரும்பாலும் கஜல், காதலின் சோகத்தையே பாடும். அதில்தான் காதலின் ஆழமும் புரியும். எனக்கு மிகவும் பிடித்த கஜல் கவிதையொன்று

என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?

தமிழை பொறுத்தவரை பெரும்பாலான காதலர்களுக்கு பரிச்சயமானவர் தபூ சங்கர்.

எனக்குப் பெண் கிடைப்பது முக்கியமில்லை
என் காதலுக்கொரு
காதலி கிடைக்க வேண்டும்.

என்கிறார் தபூ.ஒவ்வொரு மனிதனும் முழுமையாவது காதலிக்கும் போதுதான் என்று நம்புகிறேன். இதயத்தை மயிலிறகால் சில நேரம் வருடுவதும், சில நேரம் தணலில் போட்டு வறுப்பதுமென காதலின் ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியமானவை.

பேஸ்மெண்ட் பலம் போதுமென நினைக்கிறேன். இந்த வாரம் முழுவதும் காதல் சிறப்பு வாரமாக கொண்டாடலாம் என நினைக்கிறேன். முதல் பதிவாக நான் எழுதிய காதல் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றிலிருந்து தொடங்குவோம். இனி வருபவையெல்லாம் புதிய பதிவாகத்தான் இருக்கும்.

_________________________________________

உலகை அழிக்க வந்த உலக அழகி

  பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறித்து ப்ளாஸ்டிக் கவரில் சுற்றி பொக்கெயென உன் பிறந்த நாளுக்கு தர மனமில்லை எனக்கு. எனக்காக ஒரே ஒரு முறை ரோஜாத் தோட்டத்திற்கு வா. நீங்களெல்லாம் அழகான ரோஜாவல்ல என அவைகளிடம் சொல்லும் போதெல்லாம் இளக்காரம் செய்கின்றன. உன்னைப் பார்த்து தற்கொலை செய்து கொள்ளும் சில ரோஜாப்பூக்களை சேகரித்து தருகிறேன்.பொக்கெயன.

  நினைவிருக்கிறதா? சென்ற பிறந்தநாளன்று கடற்கரைக்கு சென்றோம். காற்றுக் கூட நம்மிடையே நுழைய முடியாதபடி நெருக்கமாக அமர்ந்தாய். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவனிடம் நீ வேஸ்ட்டுடா என்றபடி சற்றுத் தள்ளி அமர்ந்தாய். நம் காதல் வந்து  உட்கார்ந்துக் கொண்டது அந்த இடைவெளியில்.

   வெள்ளை நிற சுடிதாரில் உன்னைப் பார்த்த அன்று, நல்லவேளை பாரதிராஜா கண்களில் படாமல் போனாய் என உன் தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். என்னுடன் சமாதானமாக போக வேண்டியே அந்த உடை என அவர்களில் ஒருத்தி சொல்லித்தான் தெரிந்துக் கொண்டேன். நமக்குள் என்ன சண்டை என உன்னிடம் கேட்டபோது சொன்னாய். ” இனிமேல் அப்படிப் பார்க்காதீங்க. ”

    நீ பிறக்குமுன் எந்தக் கடவுளிடம் வேண்டிக் கொண்டார்களாம் உன் அம்மாவும், அப்பாவும்? அந்த ரகசியத்தை பிறருக்கும் சொன்னால் இன்னும சில ஆண்கள் என்னைப் போல அந்தரத்தில் நடக்கக் கூடுமல்லவா!!!

   என்னிடம் நீ வாங்கிச் சென்ற ரோஜாச்செடி மொட்டு மட்டுமே தருகிறது. பூக்கவே இல்லையென அலுத்துக் கொள்பவளே, உன்னை யார் மொட்டாய் இருக்கும் போதே அதற்கு முத்தம் தர சொன்னது? அடுத்த முத்தம் வேண்டி உதடு குவிந்து நிற்கிறது அவைகளும் என்னைப் போல.

   குளோபல் வார்மிங்குக்கு எதிராக உலகமே நடவடிக்கை எடுக்கவிருக்கிறதாம். விஞ்ஞானிகளும் அதற்கான காரணங்களை கண்டறிந்து அழிக்கப் போகிறார்களாம். எப்படி உன்னை அவர்களிடம் இருந்து காப்பற்ற போகிறேன் எனத் தெரியவில்லை எனக்கு.

   முதலிரவைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம் என்றேன். இரவு தொலைபேசியில் கேட்டுக்கோ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாய். அன்றிரவு, "என்னடா செல்லம் உன் டவுட்டு" என்ற உன்னிடம் “மத்த பழமெல்லாம் ஓக்கே. ஈசியா சாப்பிடலாம்.எதுக்கு அன்னாசி பழம் வைக்கறாங்க. உனக்குத் தெரியுமா?” என்றேன். சில நொடி அமைதி  கலைத்து சொன்னாய் “அங்க வந்து இந்த மாதிரி லூசுத்தனமா ஏதாவது கேட்டா உன் மூஞ்சுல தேய்க்கறதுக்கு”.

பி.கு: அடுத்த வாரம் பழைய டெம்ப்ளேட் மாற்றப்படும். இதை விட சிறந்த வேலண்ட்டைஸ் டே சிறப்பு டெம்ப்ளேட் கிடைத்தால் எனக்கு இ.மெயில் அனுப்புங்கள்.

Feb 5, 2010

”அசல்” விமர்சனம்

 

டிஸ்கி: இது போலியான விமர்சனம் இல்லை. படத்தைப் பற்றிய என் அசல் விமர்சனம்.

மீண்டும் அஜித்-சரண்-பரத்வாஜ்,வைரமுத்து கூட்டணி. தல போல வருமா பாடல் வேறு தல ரசிகர்களை முறுக்கேற வைத்திருக்கிறது. எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை. ஆனால் படம்?

100 சதவீதம் பொழுதுபோக்கு என்று சப்-டைட்டில் போடாமல் விட்டுவிட்டார்களே... என்று வருத்தப்பட வைக்கிற படம். இருந்தாலும் லாஜிக் மாறாமல் திரைக்கதையை எடுத்துச் சென்றதில் இயக்குநர் சரணுக்கு ஷொட்டு வைக்கலாம்.

அஜித் + அஜித் என இரட்டைக் குழந்தைகள். அப்பா நிழல்கள் ரவி, அம்மா சுஜாதா, தாதா பாபு ஆன்டனி கையாளாக இருந்து, அவராலேயே கொல்லப்படுகிறார் நிழல்கள் ரவி. இதை குழந்தையாக இருக்கும் ஒரு அஜித் பார்த்து விட, அவரையும் ஆன்டனி குறி வைக்கிறார். வேறு வழியில்லாமல், வெளிநாட்டுத் தம்பதிக்கு அந்த குழந்தையை தத்துக் கொடுத்துவிட்டு மற்றொரு குழந்தையுடன் சென்னையில் செட்டிலாகிறார் சுஜாதா... என்று ஃப்ளாஷ்பேக் விரிகிறது.

அம்மாவோடு வாழும் அஜித், டிரைவிங் ஸ்கூல் நடத்த, அங்கு வந்து சேர்கிறார் நாயகி. இந்தக் கூட்டணி காதல் பாடல் படிக்க, கருணாஸ் - வையாபுரி கூட்டணி காமெடியில் கலக்குகிறது. மற்றொரு, அஜித் வெள்ளை வேட்டி, சட்டை, கழுத்து நிறைய தங்க நகைகளோடு தூத்துக்குடியில் ரவுடி ராஜ்ஜியம் நடத்துகிறார். அம்மா, தம்பி மீது அவருக்கு ஏக கோபம்.

சென்னை அஜித், ஏதேச்சையாக தூத்துக்குடி செல்ல குழப்பம் ஆரம்பிக்கிறது. வில்லன்கள் மகாதேவன் - ஆன்டனி துரத்த அடிதடி ஆரம்பிக்கிறது. தாதா அஜித் சென்னையிலும், இவர் தூத்துக்குடியிலும் மாறிக் கொள்ள, ஒரு கட்டத்தில் உண்மையைப் புரிந்து கொண்டு அம்மாவிடம் அன்பு காட்டும் தாதா அஜித், எதிரிகளை வீழ்த்துகிறார்.

அஜித் - நாயகி கூட்டணி அட்டகாசத்தைத் தொடர, மீண்டும் தூத்துக்குடிக்குப் புறப்படுகிறார் மற்றொருவர். அப்புறமென்ன... சுபம் தான்.

மீண்டும் அஜித் - இரட்டை வேடம் என்பதால் ஏற்படும் ஈர்ப்புக்கு பாதகம் வராமல் இருக்க அஜித் நிறைய சிரமப்பட்டிருக்கிறார். ஒரு அஜித் அமைதியாக, அதிர்ந்து பேசாத, சாதுவாக இருக்க... மற்றொருவர் அடாவடியாக தடாலடியாக செய்கிறார். ஒருவர் சென்னைத் தமிழ்,.... மற்றொருவர் தூத்துக்குடி தமிழ்...

அழகுப் பதுமையாக வந்து செல்லும் பூஜா நடிப்பதற்கு ஸ்கோப் இல்லை. அஜித்துக்கு ஜோடியாக இவர் இன்னும் வளர வேண்டும். காமெடிக் கூட்டணியான கருணாஸ் - வையாபுரி ரமேஷ்கண்ணா நிறையத் தந்திருக்கின்றனர். குறிப்பாக, கருணாஸ் - அஜித்தின் ஆட்டோஸ்டார்ட் காமெடி நிறைய நகைக்க வைக்கிறது.

இரட்டை வேட அஜித், மாறி மாறிக் காட்சிகள் என்று இயக்குனருக்கு நிறையச் சிரமம் தரும் திரைக்கதையை லாவகமாகக் கையாண்டிருக்கிறார் சரண். என்டர்டெயின்மென்ட் என்பதற்காக லாஜிக் மீறாமல் நகர்த்தியிருப்பதில் அவருக்கு வெற்றிதான்.

வழக்கமாக ஜொலிக்கும் சரண் - பரத்வாஜ் கூட்டணிக்கு என்ன ஆச்சு? பாடல்களில் கவனம் செலுத்தப்படவில்லை. அதுபோல, பாடல் காட்சிகளை பதிவு செய்வதிலும் ஏனோ... அவசரம்.

மொத்தத்தில் அட்டகாசம், சுமாரான கமர்ஷியல் மசலா

____________________________________________________________________________

பி.கு: சத்யமாக இது நகைச்சுவை பதிவல்ல. அட்டகாசம் படத்தின் விமர்சனம் தான்