புத்தக கண்காட்சி என்றாலே பதிவர்களுக்கு கொண்டாட்டம்தான். எல்லாப் பதிவர்களும் புத்தகம் வாசிப்பவர்கள் என்று நம்ப முடிவதில்லை. ஆனால் ஏனோ புத்தக கண்காட்சியை தங்கள் வீட்டு விசேஷம் போலவே எதிர்கொள்கிறார்கள். தினமும் சந்தித்து அளவளாவிக் கொள்கிறார்கள். வீடு திரும்புகையில் சில புத்தகங்களை கையில் சுமந்து செல்கிறார்கள். கேபிள் புக் எவ்ளோ போச்சுப்பா, நிலாரசிகன் கவிதைக்கு ஃபீட்பேக் எப்படி என்று அக்கறையோடு விசாரிக்கிறார்கள். தவறாமல் லிச்சி ஜூஸ் குடித்துவிட்டு பா.ராகவனிடம் அதை அப்டேட்டும் செய்துவிடுகிறார்கள். இதையெல்லாம் எல்லோரும் செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் நான் இதையெல்லாம் செய்தேன்.
இந்த வருடத்திற்கும் போன வருடத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. எந்தவிதமான புது அனுபவத்தையும் எனக்கு தரவில்லை. இருந்தாலும் புத்தகங்களை கைகளில் ஏந்தி காகித வாசனையை நுகர்வதில் எப்போதும் சலிப்பு வருவதில்லை எனக்கு. உள்ளே நுழையும்போதே குமுதத்தின் விளம்பரங்கள் வரிசைக்கட்டி நின்றன. ரீமாசென்னுக்கு ஒரு பக்க கதைகளும், காஜல் அகர்வாலுக்கு லைட்ஸ் ஆன் சுனிலும் பிடிக்குமாம். படிப்பார்களாம். இருவருக்கும் குமுதம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதை விட தமிழில் வாசிக்கத் தெரியும் என்று அறிந்த போது கிடைத்த சந்தோஷம் இணையில்லாதது. வாழ்க. எஸ்.ஏ.பி.
இந்த முறை எனக்கு வம்சி ஸ்டால் பிடித்திருந்தது. சென்ற முறையை விட அளவில் பெரிய ஸ்டாலை எடுத்திருக்கிறார்கள். புத்தகங்கள் அடுக்கப்பட்டதிலும் ஒரு நேர்த்தி இருந்தது. வழக்கம் போலவே அட்டை வடிவமைப்பில் வம்சி கொள்ளை அழகு. பாலு மகேந்திராவின் கதை நேரம் தொடரின் திரைக்கதையும், அதன் மூலக்கதையும் தொகுப்பாக போட்டிருக்கிறார்கள். நான் வாங்கிய முதல் புத்தகம் அதுதான். கூடவே அதன் டிவிடியும் வாங்குவது நல்லது. விகடன் சுருங்கியிருக்கிறது. மிக சிறியது என்பதால் கூட்டம் அதிகமாக தெரிந்தது. நக்கீரன் ஸ்டாலில் கோபாலின் கட் அவுட்டும் (அவ்ளோ பெருசுதான்) எல்.சி.டி டிவியும் அமர்க்களமாய் இருந்தது. கூட்டமும் ஓரளவிற்கு இருந்தது. எந்தப் புத்தகம் வாங்க நிற்கிறார்கள் என்று ஒரு முறை பார்த்தேன். ம்ஹூம். நெற்றிக்கண் திறக்கும் முன் ஓடி வந்துவிட்டேன்.
ஓடிய திசை தெற்கு என்றாலும் அடைந்த இடம் கிழக்கு. வரிசையாக வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள். ஒரே நிறம். ஒரே அளவு. ஒரே விலை. அடுத்த வருடம் நீரா ராடியாவின் வாழ்க்கை வரலாற்றையும் எதிர்பார்க்கலாம். 2013ல் எதிர்த்த வீட்டு முனுசாமியின் விவரம் தேவையெனில் கிழக்கை நாடலாம். அவரைப் பற்றியும் புத்தகம் போட்டிருப்பார்கள். இன்னும் ஜூவியும், நக்கீரனும் ஸ்பெக்டரம் பற்றி எழுதிக் கொண்டுதான் இக்கிறார்கள். அதற்குள்ளாகவே ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி புத்தகமே எழுதிவிட்டார் பத்ரி. வாங்க மனம் வரவில்லை. இந்த தேர்தலிலும் திமுகவிற்கே வாக்களிக்க விரும்புவதும் காரணமாய் இருக்கலாம். கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையைப் பற்றி பெரிய புத்தகம் ஒன்றும் வெளியிட்டிருக்கிறார்கள். ரஜினியின் பன்ச் லைன் என்ற புத்தகமும் கண்ணில் பட்டது. தமிழக மக்கள் புத்திசாலிகள். கலைஞரின் திரைப்படங்களை அவர்கள் பார்ப்பதில்லை. ரஜினியின் அரசியல் அவர்களுக்கு தேவையில்லை. அந்தந்த துறையின் ராஜாக்களை அதில் மட்டுமே ரசிக்கிறார்கள். இதை உணர்ந்த கிழக்கும் இம்முறை எழுத்துலக ராஜா சுஜாதாவின் புத்தகங்களை கொட்டியிருக்கிறார்கள். ரஜினி, கமலை விட சுஜாதாவின் பெயரும், படமும் கிழக்கின் நான்கு திசைகளிலும் மின்னுகிறது. வாத்யார் வாத்யார் தான்.
காலச்சுவடு எஸ்கேப் திரையரங்கு போல ஆகிவிட்டது. கிளாசிக் நாவல்களை தனியாக பிளாஸ்டிக் ரேப்பரில் சுற்றி 200 ரூபாய் என்கிறார்கள். ஜே.ஜே சில குறிப்புகள் 200 ரூபாய் என நினைக்கிறேன். ஒரு நிமிடம் என் கண்ணுக்கு ஜெ.ஜெ சில குறிப்புகள் என்று தெரிந்தது அதன் விலை காரணமாக. எல்லா புத்தகங்களுமே அதிக விலை. கீழை காற்று என்று ஒரு பதிப்பகமும் கண்ணில் பட்டது. 60 வயது அம்மா, 35 வயது மகள், 14 வயது பேரன் என ஒரு குடும்பம் அங்கே இருந்தது. இவர்கள் அங்கே என்ன வாங்குவார்கள் என்றறிய நானும் உள்ளே நுழைந்தேன். நாஞ்சில் நாடன் புத்தகம் இருக்கா என்றார் 65 வயது பாட்டி. அங்கே சிரித்தால் செஞ்சிரிப்பு ஆகிவிடும் என்பதால் “கம்முன்னு” வந்துவிட்டேன். அதே பாட்டி கிழக்கிலும் வந்து நாஞ்சில் நாடனை தேடினார். உதவிக்கு வந்தவர் எடுத்து வருவதாய் சென்றார். பாட்டி அவர் தந்த புத்தகத்தை வேண்டாம் என்றார். ஏதோ சூடீ வாடின்னு சொன்னியே பாட்டிம்மா என்று எடுத்து தந்தான் பேரன் . பாட்டி பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்றதால் அங்கேயும் எதுவும் வாங்காமல் நடையை கட்டினார்கள். தமிழினியில் நாஞ்சில் நாடன் துணை என்று போர்டு வைக்காத குறைதான். சாகித்ய அகாடெமி விருது வாங்கிய புத்தகம் என்ற ஸ்பெஷல் அட்டைப்படம் போட்டும் பயனில்லை. பாட்டியின் கண்களில் தமிழினி படவேயில்லை. அவருக்கு பெட்ரமாக்ஸ் லைட்டும் கிடைக்கவேயில்லை.
இளைஞர்கள் கூட்டம் உயிர்மையில் தான் அதிகமாய் இருந்தது. இங்கேயும் சுஜாதா ராஜாங்கம் என்றாலும் மற்ற புத்தகங்களும் அதிமகாய் விற்கின்றன. சாரு புத்தகங்கள் இருந்த ஷெல்ஃபின் அருகே இருந்த உதவியாளரிடம் யாராவது சீரோ டிகிரி இருக்கா என்றால் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். இன்னும் வரவில்லையாம். தினம் ஒரு பதிப்பு என்றால் என்ன செய்யும் உயிர்மையும்? என்னுடன் வந்த நண்பர் லயோலா கல்லூரி மாணவர். உயிர்மை அரங்கில் நுழைந்தவுடன் கணையாழியின் கடைசி பக்கங்கள் எடுத்துக் கொண்டார். எஸ்.ராவின் பதினெட்டாம் நூற்றாண்டின் மழையை எடுத்தார். கல்லூரி மாணவர்கள் எல்லாம் படிக்க வேண்டிய சாருவின் தப்புத்தாளங்கள் பற்றி கேட்டேன். அவர்கள் கல்லூரியில் யாரும் படிப்பதில்லையாம். ஒரு வேளை வேந்தன் ஆல் பாஸ் டுட்டோரியல் கல்லூரியை சொல்லியிருப்பாரா சாரு? இருக்கும். மாலை சாரு நீண்ட தாடிக்காரர் ஒருவருடன் உயிர்மை அரங்கின் வாசலில் அமர்ந்துக் கொண்டிருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க பெரிய Q நின்று கொண்டிருந்தது. அதை கவனிக்காமல் சாரு தாடிக்காரருடன் பேசிக் கொண்டிருக்க q நீண்டு r,s,t,u… x,y வரை போனது. இவர்களுக்கு கையெழுத்து போட எத்தனை பேனா தேவைப்படும்? தமிழ்ச்சமூகம் அத்தனை பேனா வாங்கும் நிலையிலா எழுத்தாளனை வைத்திருக்கிறது? பாவம் சாரு என்றேன் அருகிலிருந்த நண்பரிடம். கோவப்பட்ட அவர் “பகவதி படத்தில் உங்காளு விஜய் ஒரு ரீஃபில்லை தூக்கி தூரப்போடுவார் தெரியுமா? அது இருந்தா போதும் அந்த தாடிக்காரருக்கு கையெழுத்து போட” என்றார்.
அவர் கிடக்கிறார். சாருவின் புகழ் அறியாதவர். சாரு பார்க்க அழகாக இருக்கிறார். சாருவின் கழுத்திலும் காதிலும் தங்கம் மின்னுகிறது. ஆனால் சாரு பாவம் ஒரு காதில் தான் கம்மல் மாட்டியிருக்கிறார். எப்போது சாருவின் இரண்டு காதிலும் தங்கம் ஜொலிக்கிறதோ அன்றுதான் கூபாவை போல, இத்தாலியை போல எழுத்தாளனை மதிக்கும் சமூகம் தமிழ்நாட்டிலும் உண்டு என அர்த்தம். சுஜாதா வாழவில்லையா? அவர் புத்தகம் விற்கவில்லையா என்பவர்கள் இலக்கியம் அறியாதவர்கள். அவர்கள் நாஞ்சில் நாடனையோ, பா,விஜயையோ படிக்கலாம். ஒரு எழுத்தாளரைத்தானே முதலமைச்சர் ஆக்கியிருக்கிறோம் என்பவர்களை மன்னிக்கவே மாட்டார் சாரு. முரசொலியில் எழுதுபவரெல்லாம் எழுத்தாளனா? தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கண்காட்சி முடிந்தவுடன் உயிர்மையின் சேல்ஸ் ரெக்கார்டை பார்க்க வேண்டும், யார் புத்தகம் அதிகம் விற்றது எனறு.
இந்த வாரம் இன்னொரு நாள் போகவிருக்கிறேன். மீண்டும் அப்போது தொடர்வோம். சாருவைப் பற்றியல்ல. புத்தக கண்காட்சியைப் பற்றி.


26 கருத்துக்குத்து:
Good Writeup!
'தோழி அப்டேட்ஸ்' புத்தகமாக அடுத்த கண்காட்சியில் எதிர்பார்க்கலாமா
//குமுதம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதை விட தமிழில் வாசிக்கத் தெரியும் என்று அறிந்த போது கிடைத்த சந்தோஷம் இணையில்லாதது. //
//வாத்யார் வாத்யார் தான். //
//அடுத்த வருடம் நீரா ராடியாவின் வாழ்க்கை வரலாற்றையும் எதிர்பார்க்கலாம்//
இதேதான் எழுதிட்டு இருந்தேன். நீங்க முந்திகிட்டீங்க. :)
//ஆனால் சாரு பாவம் ஒரு காதில் தான் கம்மல் மாட்டியிருக்கிறார். எப்போது சாருவின் இரண்டு காதிலும் தங்கம் ஜொலிக்கிறதோ //
புத்தகத்த தவிர மத்ததயெல்லாம் நக்கல் பண்ணுங்க.. என்னாத்தல? :(
//தோழி அப்டேட்ஸ்' புத்தகமாக அடுத்த கண்காட்சியில் //
இதை நான் கன்னாபின்னாவென வழிமொழிகிறேன் :D
//சாருவைப் பற்றியல்ல//
அப்போ அவ்வளவுதானா? ச்ச.. :-(
///இந்த வாரம் இன்னொரு நாள் போகவிருக்கிறேன். மீண்டும் அப்போது தொடர்வோம். சாருவைப் பற்றியல்ல. புத்தக கண்காட்சியைப் பற்றி.///
அதானே பார்த்தேன் நான் பயந்துட்டேன்...ஹிஹி
//'தோழி அப்டேட்ஸ்' புத்தகமாக அடுத்த கண்காட்சியில் எதிர்பார்க்கலாமா//
பலரின் எதிர்பார்ப்பு இதுவாகத்தான் இருக்கும் எப்ப தோழி அப்டேட்ஸ்???
ஆவலுடன்.......
செம நடை சகா... அருமையா எழுதியிருக்க...
//. வாங்க மனம் வரவில்லை. இந்த தேர்தலிலும் திமுகவிற்கே வாக்களிக்க விரும்புவதும் காரணமாய் இருக்கலாம். //
அப்படி என்றால் கண்டிப்பாக வாங்கவும்
உங்களுக்கு பிடிக்கும்
ஜீரோ டிகிரீஸ் புஸ்தகத்தை நான் பார்த்தேனுங்க.... ..
நீங்க சொன்ன அந்த பதிப்பகத்திற்கு நானும் போனேன்...புரட்சி ரசம், புரட்சி சாம்பார், புரட்சி குழம்புன்னு எல்லாம் கிடைக்குதுங்க ...
அது எல்லாம் சரி, நீங்க ஏன் நாஞ்சில் நாடனையும் பா. விஜயையும் ஒன்று போல் எழுதுகிறீர்கள்.
;)
Wrap - up என்பதன் பொருள் விளங்க இந்த கட்டுரையை படிக்க வேண்டும்.
கார்க்கி உங்களுடைய ஏரியா சரியாக இனம் கொண்டு கொஞ்சம் சிரியஸாக எழுதுங்கள் பட்டைய கிளப்பும்
நன்று
follow up
வாவ் ரொம்ப நாளுக்கு அப்புறம் சூப்பரான நடையில் அழகாய் எழுதியிருக்கிறீர்கள் சகா
// 2013ல் எதிர்த்த வீட்டு முனுசாமியின் விவரம் தேவையெனில் கிழக்கை நாடலாம்.//
//பாட்டி பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்றதால் அங்கேயும் எதுவும் வாங்காமல் நடையை கட்டினார்கள்//
//தினம் ஒரு பதிப்பு என்றால் என்ன செய்யும் உயிர்மையும்?//
//சாரு தாடிக்காரருடன் பேசிக் கொண்டிருக்க q நீண்டு r,s,t,u… x,y வரை போனது. //
//எப்போது சாருவின் இரண்டு காதிலும் தங்கம் ஜொலிக்கிறதோ அன்றுதான் கூபாவை போல, இத்தாலியை போல எழுத்தாளனை மதிக்கும் சமூகம் தமிழ்நாட்டிலும் உண்டு என அர்த்தம்.//
எப்படி இத்தனை எள்ளலாய் எழுதுகிறீர்கள் ரூம் போட்டு யோசிப்பீர்களா? தோழி கொடுத்து வைத்தவர்தான் சகா
நன்றி ராஜூ
கார்த்திக், :))
லதாமகன், அவர் எழுத்தை விமர்சிக்க வேண்டுமென்றால் அவர் மூணாங்கிளாஸில் எழுதிய லீவ் லெட்டரில் இருந்து எல்லாத்தையும் படிக்கணுமாம். அதான்
ராகவ், தனியா ஒரு பதிவு போட்டுடுலாம் சகா
மாணவன், நன்றி. பார்ப்போம்
நன்றி வெண்பூ
டாக்டர், படிச்சாச்சா?
டம்பீ மேவி, புரட்டாசி செப்டம்பர் மாதம் தான் வரும்
சண்முகநாதன், அதை சொன்னது நானில்லை. ஒரு ஜாம்பவான் தான் சொன்னார். :)
நர்சிம், 2000 பேருக்கு கையெழுத்து போட்டாராம். நீங்கதான் சாட்சி.
நன்றி யாசவி. முயற்சிக்கிறேன்
தர்ஷன், சனிக்கிழமை அதுவுமா தோழியுடன் போகாமா புக் ஃபேர் போனா கொடுத்து வைத்தவரா? :))))
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். அங்கங்கே அங்கதம் அருமை. வாழ்த்துக்கள் தோழா !
நேற்று உங்களை உயிர்மையில் உங்கள் நண்பர்களுடன் பார்த்து அறிமுகம் செய்துகொள்ள கூச்சப்பட்டு விட்டுவிட்டேன்.. எஸ்.ராவின் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தீர்கள் (நீங்கள் தானே அது ??? :) )
அருமை......
குமுதம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதை விட தமிழில் வாசிக்கத் தெரியும் என்று அறிந்த போது கிடைத்த சந்தோஷம் இணையில்லாதது. //
ங்கொய்யால!:))))
//60 வயது அம்மா, 35 வயது மகள், 14 வயது பேரன் என ஒரு குடும்பம் அங்கே இருந்தது. இவர்கள் அங்கே என்ன வாங்குவார்கள் என்றறிய நானும் உள்ளே நுழைந்தேன். நாஞ்சில் நாடன் புத்தகம் இருக்கா என்றார் 65 வயது பாட்டி. அங்கே சிரித்தால் செஞ்சிரிப்பு ஆகிவிடும் என்பதால் “கம்முன்னு” வந்துவிட்டேன். //
இன்னுமும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன்..
கலக்கலான நடை கார்க்கி..
:)
நடையும், தொகுப்பும் ரொம்ப நன்றாக இருந்தது. Good Writing.
http://blog.nandhaonline.com
பாதி ஆதி, மீதி பரிசல் :)
அப்படித்தாங்க கார்க்கி இருந்திச்சு.
கிரர்ர்ர்ர்.
adi thool.. kaarki
சிரிச்சுக்கொண்டே இருக்கிறேன் :)
Post a Comment